நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதல் முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை  தாக்கல் செய்து வருகிறார்.

வருமான வரி கணக்கை குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் அது குற்றமாக கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், வருமான வரி கணக்கை குறிப்பிட்ட நாளுக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் அது குற்றம் ஆகாது என்று கூறியுள்ளார். இதே போல 1961 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தை ஆறு மாதங்களுக்குள் சீராய்வு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்