பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில் பஞ்சாப் அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, நடப்புத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ‘ஆரஞ்சு தொப்பியை’ (Orange Cap) தட்டிச் சென்றார்.
ஆட்டம் முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது, ராஜஸ்தான் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷிக்கு அந்த ஆரஞ்சு தொப்பியை அணிவித்தார். அப்போது இருவரும் சிரித்துப் பேசி மகிழ்ந்த ஒரு ஜாலியான தருணம் கேமராவில் பதிவானது. வர்ணனையாளர் குறுக்கிட்டு, பேட்டியைத் தொடரச் சொல்லும் வரை இந்த மகிழ்ச்சியான கலாட்டா நீடித்தது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களுக்கு இடையே உள்ள பலமான பிணைப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
A star recognizes a star as #VaibhavSooryavanshi takes the Orange cap.🔥#YashasviJaiswal hands over the orange cap and applauds Vaibhav’s intent and style at the crease.🩷#TATAIPL 2026 #PBKSvRR pic.twitter.com/dYNKoHK5Dg
— Star Sports (@StarSportsIndia) April 28, 2026
பஞ்சாப் அணி நிர்ணயித்த 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு, தொடக்க வீரர்களான வைபவ் மற்றும் ஜெய்ஸ்வால் பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். வைபவ் சூர்யவன்ஷி வெறும் 16 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஜெய்ஸ்வால் தன் பங்கிற்கு 51 ரன்கள் சேர்த்தார்.
இந்த இன்னிங்ஸ் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 400 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றார். இதன் மூலம் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மாவை முந்தி அவர் முதலிடத்தைப் பிடித்தார்.
