மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் கேல்வே சாலை அருகேயுள்ள தேவி பாடா கிராமத்தில், மனிதாபிமானத்தையே உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான வெள்ள அவலம் அரங்கேறியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த 55 வயதான அனுசயா மனோகர் லிலகா என்ற பெண்மணி உடல்நலக் குறைவால் டஹானு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.

திங்கட்கிழமை அதிகாலை அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, ரயில்வே சுரங்கப்பாதையில் மார்பளவு வெள்ளநீர் சூழ்ந்திருந்ததால் கிராம மக்கள் பெரும் சிரமத்துடன் உடலை வீட்டிற்குச் சுமந்து வந்தனர்.

ஆனால், ஜூலை 6 அன்று காலையில் மழையின் வேகம் பன்மடங்கு அதிகரித்து வெள்ளநீர் வீட்டிற்குள் புகுந்ததால், தாயின் சடலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உருவானது.

இதனால் பதறிய குடும்பத்தினர், தங்களின் உயிரையும் தாயின் உடலையும் காப்பாற்ற வீட்டின் சிமெண்ட் கூரைத் தகடுகளை உடைத்து, சடலத்தை மிகக் கடினமாக மாடிக்குக் கொண்டு சென்று பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்தனர்.

எவ்வித அரசு உதவியும் கிடைக்காத சூழலில், ஒருபுறம் தாயின் சடலம், மறுபுறம் சீறிப்பாயும் வெள்ளம் என மரண பயத்துடன் சுமார் 4 மணி நேரம் அக்குடும்பத்தினர் கூரையின் மீதே தஞ்சமடைந்திருந்த பதைபதைக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.