உத்தரப் பிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தில், ஒரு தனியார் கிளினிக்கின் முன்பாக இருந்த லேப்ரடார் இன நாயை, மர்ம நபர்கள் போலேரோ காரில் ஏற்றி திருடிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ருத்ரபூர் கோத்தவாலி பகுதியின் உபநகரில் உள்ள கஜுவா சாலையில், டாக்டர் மயங்கின் கறுப்பு நிற லேப்ரடார் நாய் அவரது டென்டல் கிளினிக்கின் முன்பாக அமர்ந்து இருந்தது. நேற்று இரவு 11:50 மணியளவில், ஒரு வெள்ளை நிற போலேரோ கார் திடீரென வந்து நிற்க, அதில் இருந்து ஒருவர் இறங்கி நாயின் அருகே சென்றார்.

நாய் வாலை ஆட்டியதைப் பார்த்ததும், அவர் முதலில் பின் கதவை திறந்தார். நாய் ஏற மறுத்ததால், நடுவில் இருக்கும் கதவை திறந்து, அதன் கழுத்தில் இருந்த பட்டையை பிடித்து உள்ளே தூக்கி போட்டார். பின்னர், போலேரோ காரை வேகமாக ஓட்டி சென்றார். மறுநாள் காலை,டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் நாய் காணாமல் போனதை அறிந்து அதை தேடி வந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.