
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த நிலையப்பட்டி கிராமத்தில் கருப்பையா(46) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கருப்பையாவின் மனைவி இறந்து விட்டதால் கருப்பையா மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கருப்பையா திடிரென தனது உடல் முழுவதும் டீசலை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கருப்பையாவை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கருப்பையாவின் மகள் சரண்யா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.