
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்கிலி மாவட்டத்தில் தோண்டி ராம் போஸ்லே என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நிலையில் இவருக்கு 12 ஆம் வகுப்பு படித்து வந்த சாதனா என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பத்தாம் வகுப்பில் 92.10 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்ததால் போஸ்லே தன்மகளை டாக்டராக்க முடிவு செய்தார்.
இதன் காரணமாக பன்னிரண்டாம் வகுப்போடு நீட் தேர்விற்கும் படித்து வந்தார் சாதனா. இந்நிலையில் பள்ளியில் நீட் பயிற்சி தொடர்பாக ஒரு மாதிரி தேர்வு நடைபெற்றுள்ளது. பள்ளியில் நடந்த இந்த தேர்வில் சாதனா குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த போஸ்லே தன் மகளை கடந்த சனிக்கிழமை திட்டிய நிலையில் அவரது மகள் எதிர்த்து பேசியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் கோபத்தில் ஆட்டுக்கல் குலவியின் மரக் கைப்பிடியை எடுத்து தன் மகளின் ஆத்திரம் தீர தீர அடித்தார்.
இதனை தாயும் சகோதரனும் தடுத்த நிலையிலும் அவர் கேட்காமல் தொடர்ந்து அடித்தார். பின்னர் எதையுமே கண்டுகொள்ளாத அவர் மறுநாள் தன் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொண்டு பின்னர் வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது அவரது மகள் குளியல் அறையில் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். உடம்பில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தாய் கொடுத்த புகாரின் பேரில் தந்தையை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.