இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் நடைபெற்ற தேசிய விண்வெளி தின விழாவில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார்.

நிகழ்ச்சியின் போது அவர், “விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்?” என்று கேள்வி எழுப்ப, மாணவர்கள் ஒருமித்த குரலில் “நீல் ஆம்ஸ்ட்ராங்” என பதிலளித்தனர். அதற்கு பதிலளித்த அனுராக் தாக்கூர், “எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன்தான்” என்று தெரிவித்ததோடு, “நாம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் ஆகியவற்றை உணர்ந்து, பாடப்புத்தகங்களைத் தாண்டியும் சிந்திக்க வேண்டும்” என கூறினார்.

“>

இந்நிலையில், அவரது இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பதிவில், “நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர் வகுப்பறையில் மாணவர்களிடம், நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என கூறுவது கவலையை ஏற்படுத்துகிறது.

அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. மாணவர்களை தவறான தகவல்களுடன் வழிநடத்துவது, நம் அரசியலமைப்பில் உள்ள அறிவு மற்றும் பகுத்தறிவு மனப்பான்மையை அவமதிப்பதாகும். இந்தியாவின் எதிர்காலம் உண்மையை அடிப்படையாகக் கொண்டு ஆர்வத்தை வளர்ப்பதில் இருக்க வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.