
ரூ.9,000 கோடிக்கு மேல் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து, 2016-ல் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது “நான் மோசடிக்காரன் அல்ல” எனக் கூறி விளக்கம் அளித்துள்ளார். இங்கிலாந்தில் தங்கியிருக்கும் அவர், இந்தியாவில் தன்னிடம் நிலுவையில் உள்ள வழக்குகள், தனது விமான நிறுவனத்தின் வீழ்ச்சி, மற்றும் நாடு திரும்பாமை தொடர்பாகப் பேசினார்.
“நான் 2016 மார்ச் மாதத்திற்கு பிறகு இந்தியா திரும்பவில்லை. எனவே நீங்கள் என்னை தப்பியோடியவன் எனக் கூறலாம். ஆனால் நான் ஓடிப் போகவில்லை. முன்கூட்டியே திட்டமிட்ட பயணத்திற்காக வெளியேறினேன். எனக்கு எதிரான வழக்குகளில் நீதியுடன் விசாரணை நடக்கும் என்ற உறுதி இருந்தால், நிச்சயமாக திரும்புவதில் யோசிப்பேன்,” என்று கூறியுள்ளார். தொடர்ந்து, “மோசடிக்காரன் என்றால் என்ன? நான் ஏமாற்றவில்லை, பதவியை தவறாக பயன்படுத்தவில்லை” என்றும் தெரிவித்தார்.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் செயலிழப்புக்கான காரணமாக, 2008-ம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடியை தெரிவித்த மல்லையா, “அப்போது பண ஓட்டம் நின்றது. ரூபாயின் மதிப்பு பாதிக்கப்பட்டது. அதனால், நாங்கள் வங்கிகளில் இருந்து கடன் வாங்க வேண்டிய நிலைக்கு வந்தோம்,” என கூறினார். ₹11,101 கோடி கடன் தொடர்பாக, வங்கிகள் ஏற்கனவே ₹14,000 கோடி வசூலித்துள்ளதாகவும், உண்மையில் தான் செலுத்த வேண்டியது ₹6,200 கோடிதான் எனவும் கூறி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய அரசு, மல்லையாவை நாடு கடத்த கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை தொடர்கிறது. அதேசமயம், இந்தியாவில் நீண்ட காலமாக பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவரது விளக்கங்கள் புதிய சர்ச்சைகளை எழுப்பியுள்ளன.