உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு நீர் பூங்காவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குளிக்கச் சென்ற நீச்சல் குளத்தில் திடீரென ஒரு பாம்பு நுழைந்து நீந்த தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த திடீர் நிகழ்வை அங்கு இருந்த ஒருவர் தனது மொபைல் கேமராவில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த 20 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், நீர் பூங்காவின் நீச்சல் குளத்தில் மக்கள் குளிக்கின்ற நேரத்தில், ஒருவர் ‘பாம்பு… பாம்பு…!’ என்று அலறினார். அதற்குப்பின் அங்கிருந்தவர்கள் பீதி கொண்டு கத்தி ஓடத் தொடங்கினர்.

குளம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்த நிலையில், பாம்பு ஒரு பக்கத்தில் வேகமாக நீந்துகிறது. அதை கண்டு, ஒரு பெண் பயந்து நடுங்கி தண்ணீரிலிருந்து வெளியேறும் காட்சியும் காணப்படுகிறது.

இந்த வீடியோவை @askbhupi என்ற பயனர் சமூக வலைதளம் X-இல் பகிர்ந்துள்ளார். “டேராடூனில் உள்ள சாஸ்த்தாரா நீர் பூங்காவில் பாம்பு ‘கிராண்ட் டிரைவ்’ எடுக்கிறது.  மக்கள் பரபரப்புடன் ஓடினர், பாம்பு ‘நான் ஸ்பா அனுபவிக்கிறேன்’ என்று சாந்தமாக நீந்தியது,” என நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது 2.31 லட்சம் பார்வைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விருப்பங்கள் பெற்று வைரலாகி வருகிறது. மேலும், பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து “நீர் பூங்கா பாதுகாப்பு குறைவு” குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.