
மத்தியபிரதேசம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போதைய விசாரணைகளில், குற்றம் சாட்டப்பட்ட மனைவி சோனம் ரகுவன்ஷி கடந்த மார்ச் 1 முதல் 25 வரை, சஞ்சய் வர்மா என்ற நபருடன் 112 முறை தொலைபேசியில் பேசியிருந்தது அழைப்பு விவரங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதையடுத்து, சஞ்சய் வர்மாவின் பங்கு குறித்து போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த வழக்கில் சோனம் உள்ளிட்ட நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சோனம் கடந்த வாரம் வாரணாசியிலிருந்து காஜிபூருக்கு வந்திருந்தபோது, அங்குள்ள ஒரு தாபாவில் இருந்து கைது செய்யப்பட்டு ஷில்லாங் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த இடத்தில் போலீசார், ராஜாவைக் கொன்ற ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், சோனத்தின் அழைப்பு வரலாறு, இந்த வழக்கில் மூன்றாவது முக்கிய நபரான சஞ்சயை வெளிக்கொணர்ந்துள்ளது.
சஞ்சய் வர்மாவின் தொலைபேசி எண் தற்போது அணைசுவிட்ச் ஆப் ஆக இருக்கும் நிலையில் அவர் எங்கே உள்ளார் என்பது தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சோனத்தின் சகோதரர் கோவிந்த், சஞ்சயைத் தனிப்பட்ட முறையில் அறியவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும், அவரது அழைப்பு தொடர்புகள் விவரம் தெளிவாகக் காட்டுவதால், சஞ்சயின் பங்கு குறித்து பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. தற்போது, ஷில்லாங் போலீசார் சஞ்சயை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர், இந்த வழக்கின் நுட்பமான பின்னணிகளை விரிவாக வெளிக்கொணரும் நோக்கத்தோடு விசாரணை தொடர்கிறது.