
அகமதாபாத்தில் விமானம் விபத்து உள்ளான பயங்கர சம்பவத்தில் 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல நிபுணர்கள் விமானம் விபத்தில் சிக்கியதற்கு என்ஜின் கோளாறு, பறவை மோதல் உள்ளிட்ட காரணங்களாக இருக்கலாம் என கூறினர்.
ஆனால் சிசிடிவி காட்சிகளில் பறவை எதுவும் மோதியதற்கான ஆதாரங்கள் தென்படவில்லை. இந்த நிலையில் பிரபல மூத்த விமானியான ஸ்டீல் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் தனது கருத்தை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, எந்தவித சிரமமும் இல்லாமல் 12 டிகிரி கோணத்தில் டேக் ஆப் ஆகும் விமானத்தில் இறக்கை அதற்கு ஏற்ப இல்லாமல் சற்று வளைந்திருப்பதாக தெரிகிறது. சரியான நேரத்தில் கியர் லிவருக்கு பதிலாக பிளாப் லிவர் அழுத்தி இருந்தால் தான் இப்படி சூழல் ஏற்படும்.
கியர் லிவர் என்பது தரையிறங்கும் போது பயன்படும் சக்கரத்தை மேலே எழுப்புவதற்கு உபயோகப்படும். பிளாப் லிவர் என்பது விமானம் மெதுவாக பறக்கும்போது அதனை மேலே உந்துவதற்கு உதவி செய்யும்.
எனவே துணை விமானி சக்கரத்தை மேலே எழுப்பும் கியர் லிவருக்கு பதிலாக விமானத்தை உந்தும் திறன் கொண்ட பிளாப் லிவரை அழுத்தி இருக்கலாம். அப்படி செய்தால் விமானம் சட்டென கீழே விழுந்து விட வாய்ப்பு உள்ளது. இது எனது கருத்து மட்டும்தான். உண்மை காரணங்கள் தெரியவந்தால் அதனை பரிசீரிப்பதாக ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.