
ஜூன் 4ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றிக்காக சின்னசாமி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான நாள், ஒரு பெரும் பேரழிவாக மாறியது. கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் IT பணியாளரும் தீவிர RCB ரசிகருமான தேவி என்பவரும் உயிரிழந்துள்ளார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி, தேவி மதியம் 2:30 மணியளவில் அலுவலகத்திலிருந்து சிறு நேர விடுப்பெடுத்து, விராட் கோலியின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள கிளம்பினார்.
பாஸ் இல்லையெனினும், வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தனது மடிக்கணினி மற்றும் பையை அலுவலகத்தில் விட்டுவிட்டு நண்பருக்கு “நான் வந்து கொண்டிருக்கிறேன்” என செய்தி அனுப்பியதும், அது அவரது கடைசி செய்தியாக மாறியது.
அவரது மரணச் செய்தி, மருத்துவமனையிலிருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து உறவினர்களுக்கும் அலுவலகத்தாருக்கும் தெரியவந்தது. தேவி, தாய்-தந்தைக்கு ஒரே மகளாக இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. பிற்பகல் 3:30 மணியளவில் கூட்டம் உச்சத்தை எட்டியது, குறிப்பாக கப்பன் பார்க் மெட்ரோவிலிருந்து மக்கள் பெருமளவில் வந்ததால் நிலைமை மேலும் மோசமானது.
RCB வெற்றிக்காக வந்த ரசிகர்களின் உற்சாகம், தற்காலிக ஏற்பாடுகள், கட்டுப்பாடில்லாத கூட்டம் ஆகியவற்றால் சோகமயமான அனுபவமாக முடிந்தது. தற்போது சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.