
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை நாட்டையே உலுக்கியது. அதாவது பாஜக முன்னாள் தலைவரின் மகன் புல்கித் ஆர்யா என்பவரது ரிசார்ட்டில் பணிபுரிந்த இளம் பெண் அங்கிதா பாண்டரி கொலை செய்யப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி அங்கிதா காணாமல் போனதாக பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு அவரது உடல் சில்லா கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது.
அந்த சம்பவம் நடந்த தினத்தின் மாலை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைவர் வினோத் ஆரியாவின் மகன் புல்கித் ஆர்யா, ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர் மற்றும் மற்றொரு ஊழியர் அங்கித் ஆகியோர் ரிஷிகேசுக்கு சென்று கொண்டிருந்தபோது திரும்பி வரும்போது அங்கிதா காத்திருந்தார். அவர் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக நடைபெறும் சம்பவங்கள் குறித்து அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கோபத்தில் அந்தப் பெண்ணை கொலை செய்து கால்வாயில் தள்ளிவிட்டனர்.
அதாவது ரிசார்ட்டுக்குவரும் விருந்தினர்களை மகிழ்விக்க வேண்டும் என அவர்கள் அங்கீதாவிடம் கூறிய நிலையில் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் இந்த கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட புல்கித் ஆரியாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதேபோன்று சௌரப் மற்றும் அங்கித் ஆகியோருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் போலீசார் 500 பக்க குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்த நிலையில், 47 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட ரிசார்ட் அதிகாரிகளால் இடித்து தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.