
மத்திய அரசாங்கம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க இருப்பதாக நேற்று முன்தினம் முதல் ஒரு செய்தி தீயாக பரவி வந்த நிலையில் இதற்கு நேற்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது நாடு முழுவதும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீரில் 23913 கன அடி நீர் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நிலத்தடி நீரை வீணாக்குவதை தடுக்கும் நோக்கத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கும் வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்தது.
இதனை எதிர்த்து பல இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தடி நீரிலிருந்து உறியப்படும் 83 சதவீதம் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதால் மாநில அரசுகளுடன் சேர்ந்து 22 புதிய திட்டங்களை மத்திய அரசாங்கம் செயல்படுத்த இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசாங்கம் முற்றிலும் மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரி விதிப்பது பற்றி மத்திய அரசு எந்த ஒரு முடிவும் செய்யவில்லை.
இது தொடர்பாக ஏற்கனவே மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் விளக்கம் கொடுத்துள்ளார். எனவே விவசாயிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம். மேலும் வெளிப்படை தன்மைக்காகவும் தவறான செய்திகள் பரவுவதை தடுப்பதற்காகவும் தற்போது இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.