அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள்இன்று  பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள்  போராட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிஐடியு (CITU) உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால், மாநிலத்திலேயே பேருந்து சேவைகள் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தும் அரசு பேருந்துகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் போக்குவரத்து சேவைகள் இந்த வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை சார்பில் கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அனைவரும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) பணிக்கு வந்த ஊழியர்கள், புதன்கிழமை (ஜூலை 9) விடுப்பு பெற முடியாது என்றும், அதற்குப் பதிலாக வியாழக்கிழமை (ஜூலை 10) விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனவும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதனுடன், வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக தேசியமயமாக்கப்பட்ட கூட்டுறவு வணிக வங்கிகளின் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக தமிழகத்தில் 25,000 முதல் 30,000 வரை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர். இதனால், வரைவோலை, காசோலை மாற்றுதல், பணப்பரிவர்த்தனை போன்ற முக்கிய வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதனால், நாளை பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வங்கி சேவைகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.