பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்ந்த இறுதிப்போட்டி வரை முன்னேறினார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அதன் பிறகு தனக்கு வெள்ளி பதக்கம் வேண்டும் என்று வலியுறுத்தி வினேஷ் போகத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது வினேஷ் போகத் தாயகம் திரும்பியுள்ளார். அவர் டெல்லி ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி தீபக் ஹூடா, சக மல்யுத்த வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் இந்த வரவேற்பை பெற்றுக்கொண்ட வினேஷ் கண்ணீர் மல்க அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.