
கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த நாடகக் கலைஞர் வெங்கடேசன் (44). அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மப்பாவின் மனைவிக்கும் கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்துக்கு மாறான உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த தகாத உறவை நரசிம்மப்பா பலமுறை கண்டித்தும் இருவரும் அதை கைவிடாததால், அவர் கடும் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை தனது மனைவி வேலைக்குச் செல்கிறேன் என கூறி வெங்கடேசனுடன் வெளியே சென்றுள்ளதைக் அறிந்த நரசிம்மப்பா, இருவரையும் தேடி கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் சென்றுள்ளார்.
அங்கு வெங்கடேசனை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துசென்று கூரிய ஆயுதத்தை எடுத்து வெங்கடேசனின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியதால் வெங்கடேசன் ரத்தவெள்ளத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.
சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெங்கடேசனை ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, கொலை செய்த நரசிம்மப்பாவை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.