மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில், காலி வீடுகளில் திருடும் பழக்கமுள்ள 60 வயதான இலியாஸ் கான் என்பவர் பிப்லானி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பஜாரியா பகுதியில் வைத்து பிடிபட்ட இவர், நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.

காவல்துறையினரால் கண்காணிக்க முடியாத வகையில் மொபைல் போனும் பயன்படுத்தவில்லை. அவரிடமிருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில், இலியாஸ் கான் தனது கூட்டாளி ஆசிப் கானுடன் சேர்ந்து பிப்லானி பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் திருடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 18-ஆம் தேதி கோபால்நகர் பகுதியில் உள்ள ராம் கிஷோர் புஷ்பக்கின் வீடு மற்றும் மே 26-ஆம் தேதி திருப்பதி ஹைரைஸ் காலனியில் பிரியங்கா சர்மாவின் வீடுகளில் நடந்த திருட்டுகளில், இலட்சக்கணக்கான நகைகள் கொள்ளை போயிருந்தன.

ஆசிப் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவான இலியாஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலேயே பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது 11 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது, இலியாஸ் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில்சென்று  நள்ளிரவுகளில் நோட்டமிட்டு காலியான வீடுகளை குறிவைத்து திருடுவதாக ஒப்புக்கொண்டுள்ளார். திருட்டுக்குப் பிறகு வேறு நகரங்களுக்கு தஞ்சம் புகுவதாகவும், பணம் முடிந்ததும் மீண்டும் திருடுவதாகவும் கூறியுள்ளார். தற்போது அவரை காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.