
தெற்கு டெல்லியின் சுந்தர் நாக்ரி பகுதியைச் சேர்ந்த கோமல் என்ற 24 வயது இளம்பெண், கடந்த மார்ச் 12-ஆம் தேதி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் சீமாபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மார்ச் 17-ஆம் தேதி ஒரு பெண்ணின் உடல் கால்வாயில் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது சடலமாக மிதந்த பெண் காணாமல் போன கோமல் என்பது உறுதியானது.
இந்த வழக்கு தொடர்பாக கோமலின் நண்பர் ஆசிஃப் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது ஆசிஃப் தனது காரில் கோமலை அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஆசிஃப் கோமலின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரது உடலில் கல்லை கட்டி கால்வாயில் வீசி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.