உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், காளை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சனிக்கிழமை காலை சுமார் 9.45 மணியளவில், சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள சந்தன் நகர் பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் சம்பவம் முழுவதும் பதிவாகியுள்ளது. காட்சிகளில், ஒரு முதியவர் குச்சியின் உதவியுடன் சாலையில் நடந்து செல்வது தெரிகிறது. அப்போது, தெருவில் திரிந்த காளை  விரைந்து வந்து தாக்க முயற்சிக்கிறது.

 

முதியவர் குச்சியால் காளையை விரட்ட முயன்றும், அது பயனளிக்கவில்லை. ஒரு பெண் அவருக்கு உதவ முயன்றார். மேலும், அங்கிருந்த ஒருவர் தண்ணீர் ஊற்றி காளையை விரட்ட முயன்றபோது, காளை மேலும் ஆவேசமடைந்து முதியவரை தாக்கியது.

கடுமையாக காயமடைந்த முதியவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.