
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பனைவிளை பகுதியில் இன்று அதிகாலை அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. அந்த பகுதியில் வசித்து வரும் ரவி என்பவரின் வீட்டில் இருந்த ஏர் கண்டிஷனர் (ஏசி) திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த நேரத்தில் வீட்டில் நான்கு வயது சிறுவன் மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், ஏற்பட்ட சத்தத்தால் திடுக்கிட்டுவிட்ட சிறுவன் அலறியவாறு வெளியே ஓடி உயிர் தப்பியுள்ளார்.
வீட்டில் ஏசி வெடித்ததால் உள்ளே முழுவதும் கரும்புகை பரவியது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர். இந்த வெடிப்பில் வீட்டில் இருந்த இரண்டு மெத்தைகள், டிவி உள்ளிட்ட சாதனங்கள் நாசமாகியுள்ளன. மேலும் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், பெரும் சேதமின்றி உயிர்தப்பியிருப்பது பெரும் அதிர்ஷ்டம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏசியின் வெடிப்பு தானாக ஏற்பட்டதா? இல்லை எனில் மின்கசிவு, உதிரிபாக மோசடிகள் போன்ற காரணமா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், வீட்டில் ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்தும்போது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.