மதுரை மாவட்டம் அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் 36 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவர் பிரிந்து வாழ்கிறார். என் குழந்தைகளை அக்கா பராமரித்து வருகிறார். தினமும் இரவு நேரம் எனது தாய் என்னுடன் தூங்கிவிட்டு அதிகாலையில் அவரது வீட்டிற்கு செல்வது வழக்கம்.

கடந்த 29-ஆம் தேதி நான் மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அருகில் யாரோ படுத்திருப்பது தெரிந்ததால் சட்டென எழுந்து கூச்சலிட்டேன். அந்த நபர் எனது அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசிக்கும் நபர் என்பது தெரியவந்தது. அவர் என் வாயை பொத்தி கொலை செய்து விடுவேன் என விரட்டி அத்துமீற முயன்றார்.

நான் மறுப்பு தெரிவித்ததால் கத்தியால் எனது கழுத்து முதுகில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து என்னை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அந்த நபரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.