தேனி மாவட்ட பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைமணி (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமயந்திரன் (30) என்பவரிடம் புகை பிடிக்க தீப்பெட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மது போதையில் இருந்த தமயந்திரன், அவரது நண்பர்கள் தங்க பிரபாகரன், ராமகிருஷ்ணன் உட்பட நால்வர், பிச்சைமணி தனது வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரை அரிவாளால் வெட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த பிச்சைமணியை அக்கம் பக்கத்தவர்கள் மீட்டு, முதலில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரியகுளம் தென்கரை போலீசார், வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இப்படியான வன்முறை சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.