உத்தரபிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள பிசாவனில் நடந்த ஒரு திருமண விழாவில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஹர்தோயின் மிஹிபூர் கிராமத்தைச் சேர்ந்த விமல் என்ற மணமகன், ஜூன் 7ஆம் தேதி தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு மிகுந்த ஆடம்பரத்துடன் மணமகளின் வீட்டிற்கு வந்தார். டிஜே இசை, விளக்குகள், உணவு மற்றும் பரிசுகளுடன் சிறப்பான வரவேற்பும் வழங்கப்பட்டது. ஆனால் மேடையில் மணமகனை பார்த்ததும், மணமகள் திருமணத்தை நிறுத்தியதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

மணமகள் அனிதா கூறியதாவது, “எனக்கு தாடி வைத்த பையன் வேண்டாம். நாங்கள் சுத்தமாக சவரம் செய்த மணமகனைத்தான் விரும்புகிறோம். இவரை நான் திருமணம் செய்ய மாட்டேன்” என்று கூறினார். அவரது இந்த முடிவால் இரு குடும்பத்தினரும் பரபரப்பாக விவாதிக்கத் தொடங்கினர். அதன் பிறகு சமாதானப்படுத்த பலரும் முயன்றாலும், மணமகள் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.  இதன் காரணமாக திருமணம் நின்றது. மகிழ்ச்சியாக வந்த மணமகன் சோகத்தோடு வீட்டிற்கு திரும்பினார்.

இதற்கிடையில், மணமகன் தரப்பு “தாடி வைத்திருந்ததற்காகவே திருமணம் ரத்து செய்யப்பட்டது” எனக் கூறியது. ஆனால் மணமகள் தரப்பு குடும்பம் வேறு காரணங்களை வெளிப்படுத்தினர். அதாவது திருமண ஊர்வலம் வந்தபோது அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், மணமகனின் தந்தை பூஜையின் போதே கூடுதல் வரதட்சணை மற்றும் ஒரு பைக் கேட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மணமகன் பெயரில் 10 பிகா நிலம் இருப்பதாக முன்பு கூறப்பட்ட தகவலும் பொய்யாக இருப்பது தெரியவந்ததாகவும் கூறினர்.

இவ்வாறு, ஒருபுறம் தாடி வைத்திருப்பது, மறுபுறம் வரதட்சணை கோரிக்கை, குடிபோதை, நில விவகாரம் என பல்வேறு காரணங்களால் இந்த திருமணம் முறிந்தது. போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இரு தரப்பினரும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் அங்கும் பேச்சுவார்த்தை பலனளிக்காததால், திருமணம் முற்றாக ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரம் தற்போது சீதாபூரில் மட்டுமல்ல, முழு மாநிலத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.