திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காசிரெட்டிபேட்டை பகுதியில் உதயகுமார்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பியூட்டிஷியனாக வேலை பார்த்தார். இந்த நிலையில் உதயகுமாருக்கும் ஆந்திராவை சேர்ந்த பவித்ரா(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் புதுமண தம்பதியினர் விருந்துக்காக ஆந்திராவில் இருக்கும் மணமகளின் வீட்டிற்கு சென்றனர். அப்போது உதயகுமார் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

மாலை நீண்ட நேரமாகியும் உதயகுமார் வராததால் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இரவு 8 மணிக்கு உதயகுமாரின் செல்போனில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது சித்தூர் ஆறு வழிச்சாலை பணிகள் நடைபெறும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து உதயகுமார் படுகாயங்களுடன் கிடப்பதாகவும், செல்போனில் சார்ஜ் இல்லாததால் தனது காரில் சார் செய்து செல்போனில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகவும் ஒருவர் கூறியுள்ளார்.

உதயகுமாரை மருத்துவமனையில் அனுமதிப்பதாகவும், நீங்கள் மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் எனவும் அந்த நபர் கூறியுள்ளார். இதனிடையே திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உதயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உதயகுமார் யாராவது அடித்து கொலை செய்யப்பட்டார? அல்லது விபத்தில் சிக்கியதால் இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 நாளில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.