பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், திருமணத்துக்குப் பிறகு ஒரு புதுமணப் பெண் தனது காதலனுடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புல்வாரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீநகர் கிராமத்தைச் சேர்ந்த மந்து பைதா என்பவர் சுல்புலி தேவி என்ற பெண்ணை கடந்த ஜூன் 5ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணமான வெறும் ஒன்பது நாட்களிலேயே காதலனுடன் தலைமறைவானதாகவும் புகார் அளித்துள்ளார்.

சம்பவ தினமான ஜூன் 14ஆம் தேதி, சுல்புலி தேவி, தனது கணவருடன் குசவுண்டி சந்தைக்கு சென்றபோது, வளையல்கள் வாங்க வேண்டும் என கூறி ஒரு கடையில் நுழைந்தார். பின்னர், அருகில் உள்ள ஒருவர் மொபைல் கேட்டதாகக் கூறி வெளியே சென்ற பின்னர், திரும்பி வரவில்லை. கணவர் மந்து பைதா தொடர்ந்து தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும், அவருடைய மனைவி வீட்டில் சேமித்து வைத்திருந்த ரூ.4 லட்சம் பணத்தையும், ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும் எடுத்துச் சென்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, புல்வாரியா காவல் நிலையத்தில் எழுத்துப் புகார் அடிப்படையில், மிர்கஞ்ச் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.எச்.ஓ ஜெய்ஹிந்த் யாதவ் தெரிவித்தார். போலீசார் தற்போது தலைமறைவான பெண்ணையும், சந்தேக நபரையும் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.