குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருப்பதால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த விமான விபத்தில் பலர் தங்கள் சொந்தங்களை இழந்து கதறி துடிக்கும் செய்திகள் தற்போது வெளியாகி நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

அந்த வகையில் திருமணம் ஆகி 5 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் தன் கணவனுடன் வாழ்வதற்காக லண்டன் சென்ற இளம்பெண் விமான விபத்தில் பலியான சோகம் குடும்பத்தினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது அங்கிதா என்ற பெண்ணுக்கு வசந்த் (30) என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் வசந்த் இங்கிலாந்தில் ஒரு பல்பொருள் அங்காடி நடத்தி வருவதால் முன்னதாகவே லண்டன் சென்றுவிட்டார். அவர் திருமணம் ஆன 12 நாட்களில் லண்டன் சென்று விட்ட நிலையில் கடந்த 5 மாதங்களாக பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட நடைமுறைகளை நிறைவு செய்த அங்கீதா நேற்றுதான் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானத்தில் கிளம்ப தயாரானார்.

அவர் குடும்பத்தினரிடம் பிரியா விடை கொடுத்து கண்ணீரோடு கிளம்பிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் கணவருடன் ஆசையாக வாழ்வதற்காக சென்ற இளம்பெண் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.