
திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கும் இந்து மக்களுக்கும் தான் சொந்தம் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று இந்து அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவை திரும்பப்பெற்று போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு இந்து அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தார்கள். இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் ஆர்ப்பாட்டம் நடத்த பல நிபந்தனைகளோடு அனுமதி வழங்கி இருந்தார்கள்.
இதனை தொடர்ந்து இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் பாஜகவினர் என மூவாயிரத்து மேற்பட்டவர்கள் மதுரை ரவுண்டான பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கலந்து கொண்டு பேசினார். அதில், “75 முறை போராடி தான் ராம ஜென்ம பூமி மீட்கப்பட்டது. இந்த அரசுக்கு எதிராக இந்துக்கள் தொடர்ந்து போராடுவார்கள்.
திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கும் இந்து மக்களுக்கும் தான் சொந்தம். யாரும் பங்கு போட அனுமதிக்க மாட்டோம். இஸ்லாமியர்கள் இந்துக்களோடு சகோதரத்துவத்தோடு இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு ஒரே வழி திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்