அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபிக்கும் பொறுப்பில் உள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் திருச்சியில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் ஓபிஎஸ் தலைமையில் 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். அதிமுக கட்சி முழுமையாக இபிஎஸ் பக்கம் சென்று விட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் கட்சி தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு நிரூபிக்கும். இந்த மாநாடு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடத்துவதன் மூலம் அவரது 200 கோடி கருப்பு பணம் வெளியே வரப் போவதாக இபிஎஸ் ஆதரவாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ஓபிஎஸ் மாநாடு நடத்த உள்ளதால் அவர் சேர்த்து வைத்திருந்த கருப்பு பணம் அனைத்தும் வெளியே வர உள்ளது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்தினால் அவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என்பது தெரியவரும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.