பிரான்ஸில் இருந்து கரிபியன் தீவான குவாடெலூப் நோக்கி புறப்பட இருந்த ஏர்பிரான்ஸ் விமானம் AF750, பயணியொருவரின் செல்போன் காணாமல் போனதால் அவசரமாக திரும்பி வந்து பாரிஸ் ஓர்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய சுவாரசியமான சம்பவம் கடந்த  மார்ச் 21 ஆம் தேதி நடந்துள்ளது. அதாவது 375 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் புறப்பட்ட இந்த விமானம், 32,000 அடி உயரம் சென்றதும், பயணியொருவர் தன்னுடைய மொபைல் தொலைந்து போனதாக புகார் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து விமான பணியாளர்கள் மற்றும் பிற பயணிகள் மொபைலை தேடியும், அது கிடைக்கவில்லை. இது ஓர் சாதாரண விஷயம் போல் தோன்றினாலும், விமானத்தில் செல்போன்கள் போன்ற லித்தியம்-அயன் பேட்டரி கொண்ட சாதனங்கள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால், பாதுகாப்பு காரணமாக விமானம் திரும்ப அழைக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட 2 மணி நேரத்திற்குள் மீண்டும் பாரிஸ் ஓர்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

இந்தச் சம்பவம்  விமானப் பயணத்தின்போது மின்சாதனங்களை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தங்கள் சாதனங்களை சரியாக பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.