மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சிந்தி முகாம் பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுவன், மற்றொரு 12 வயது சிறுவனுடன்  ஸ்கூட்டியை அதிவேகமாக ஓட்டி வந்தார்.

அப்போது, சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் மீது மோதியதால், அந்த பெண் கீழே விழுந்தார். மோதியதும், ஸ்கூட்டி வழுக்கி சிறுவர்கள் இருவரும் சாலையில் விழுந்தனர். அதே சமயம் பின்னால் வந்த ஒரு தண்ணீர் டேங்கர் லாரி அருகில் வந்தது.

ஆனால் லாரி டிரைவர்  உடனடியாக பிரேக் போட்டதினால், அந்த 2 சிறுவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பொதுமக்கள் இந்தக் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் காயமடைந்த பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர். மேலும்  சிறுவர்களுக்கு  வாகனம் கொடுத்த பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜபல்பூர் எஸ்பி சோனாலி துபே தெரிவித்துள்ளார்.