
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள பபுவா காவல் நிலைய எல்லை பகுதியில் அமைந்துள்ள கத்ரா கிராமத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி வாக்குவாதத்திலும், பரபரப்பிலும் முடிந்தது. அதாவது செனாரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகாதி கிராமத்தை சேர்ந்த ஹிரா குமார் என்ற இளைஞர், திருமண ஊர்வலத்துடன் வந்து, துவார பூஜை உள்ளிட்ட அனைத்து சடங்குகளும் முடிந்து, சிந்தூர் தானம் செய்யும் நேரத்தில், அவர் தனது கையை உயர்த்தவில்லை.
இதனைப் பார்த்த மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர், மணமகனுக்கு உடல்நலக்கோளாறு உள்ளது எனக் கூறி, திருமணத்தை நிறுத்திவிட்டனர். “பையன் பைத்தியம் போல இருக்கிறான், நான் அவனை திருமணம் செய்து கொள்ள முடியாது” எனத் தெரிவித்த மணமகள், திருமணத்தை நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 112 எண் மூலம் போலீசில் தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் பபுவா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வற்புறுத்தல்கள் மற்றும் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்து திருமணத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால், ஹிரா குமார் மணமகள் இல்லாமல் ஊருக்குத் திரும்பினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, மணமகனின் குடும்பம் கூறுகையில், “மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்தோம். அதில் 90,000 ரூபாய் கையில் கிடைத்தது. அதிலிருந்து நகைகள், புடவை, டிஜே ஆகியவற்றிற்கு செலவு செய்து, மீதம் இருந்த பணத்தில் திருமண ஊர்வல வாகன ஏற்பாடுகளை செய்தோம். இப்போது அவர்கள் திருமணம் இல்லை என்றும், பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு கூறுகிறார்கள்” எனக் கடும் விரக்தி தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. மேலும் இது குறித்து காவல்துறையினர் இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.