தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கூறினார். இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாட்டில் அதனை பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா முதற்கொண்டு பல தரப்பினரும் நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடுஅவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த சர்ச்சைக்கு அன்புமணி ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்  என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.

உலகின் மூத்த மொழிகளாக  அறியப்படுபவை லத்தீன், கிரீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின்  உள்ளிட்டவை தான், இந்த மொழிகள் அனைத்தையும் விட மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான்  பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது.

கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. 2004-ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  கன்னடமும், தெலுங்கும் 2008-ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும். அதை விடுத்து  மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள்  தவிர்க்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.