வேலூர் மாவட்டம் திருவலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(35). இவர் கூலி பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஐயப்பன் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக ஐயப்பன் ஊருக்கு வெளியே இருக்கும் தனது விவசாய நிலத்தை ஒட்டி புதிதாக வீடு கட்டி வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஐயப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு ஐயப்பன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தலையில் கல்லால் தாக்கப்பட்டு இறந்து கிடந்த ஐயப்பனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஐயப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயா(42), அவரது மகன் இந்து குமார்(22) ஆகிய இருவரும் ஐயப்பனை கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து ஐயப்பனை கொலை செய்ததற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.