உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மஹ்சி பகுதியை சேர்ந்த காதிபூர்வா கிராமத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இரவு நேரத்தில் தாயின் மடியில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆயுஷை, ஒரு காட்டு விலங்கு எதிர்பாராதவிதமாக தூக்கி சென்றது.

குழந்தையின் தாய் குஷ்பு பயந்துபோய் கத்த ஆரம்பித்ததும், கிராம மக்கள் ஓடி வந்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் சேர்ந்து குழந்தையை தேடத் தொடங்கினர். நீண்ட நேர தேடலுக்குப் பிறகு, அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் குழந்தையின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

குழந்தையின் உடலில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலை அந்த விலங்கு தின்றுவிட்டது. உடல் முழுவதும் பற்களின் காயங்கள் இருந்தன. இது மனித உண்ணி விலங்கு தாக்குதலாக இருக்கக்கூடும் என்று கிராம மக்கள் கூறினர்.

குழந்தையின் தாய், இது ஓநாய் தாக்குதல் தான் என்று நம்புகிறார். ஏனெனில் கடந்த வருடம் இதே மஹ்சி பகுதியில் ஓநாய்கள் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பலர் குழந்தைகளே ஆக இருந்தனர், மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பஹ்ரைச் மாவட்ட வன அதிகாரி அஜித் சிங் தெரிவித்ததாவது, “சடலம் கிடைத்த இடத்திற்கு அருகில் நரிகள் காணப்பட்டுள்ளன. எந்த விலங்கு தாக்கியது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது” என கூறினார். தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் மக்கள் எல்லோரும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.