
பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தாந்த்ரீக சடங்கில் பங்கேற்றதாக கூறப்படும் ஒரு பெண், தனது செல்லப்பிராணி நாயை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த திரிபர்ணா பயக் என்ற 32 வயது பெண், தனது லாப்ரடோர் இன நாயின் கழுத்தை நெரித்து கொன்று பின்னர் கழுத்தை வெட்டியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்ததாக கூறப்படுகிறது. தாந்த்ரீக சடங்கு நடத்தியதற்குப் பிறகு, அவர் நாயின் உடலை ஒரு துணியில் சுற்றி வீடு முழுவதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டி விட்டு தப்பி சென்றுள்ளார். சில நாட்களுக்கு பிறகு அதே அடுக்குமாடியில் வசிக்கும் மக்கள் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அனுபவித்து, உடனடியாக பெங்களூரு மாநகராட்சிக்கு (BBMP) தகவல் அளித்துள்ளனர்.
BBMP அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை திறந்தபோது, நாயின் அழுகிய உடலைக் கண்டனர். அதே நேரத்தில், வீடு முழுவதும் சிதறிக்கிடக்கும் மதப் பொருட்கள், சுவரில் பதிக்கப்பட்ட குத்தகைகள், சுவாமி படங்கள் போன்றவைகள் காணப்பட்டுள்ளன. இது சம்பவம் தாந்த்ரீக சடங்குடன் தொடர்புடையதா என சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வீட்டில் இருந்த மற்ற இரண்டு நாய்கள் சுவரில் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் இருந்தன.
நாயின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், நாய் சுமார் நான்கு நாட்களுக்கு முன்பே கொல்லப்பட்டதாக உறுதி செய்துள்ளனர். மீதமிருந்த இரண்டு நாய்களும் BBMP மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. புகாரின்பேரில், மகாதேவபுரா காவல் நிலைய போலீசார் திரிபர்ணா பயக்கின் மீது விலங்கு வதை மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. விலங்கு உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல பிரபல அமைப்புகள், இந்த கொடூரமான செயலை கண்டித்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவம் செல்லப்பிராணிகள் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகளை மீண்டும் ஒரு முறை நம்மை சிந்திக்க வைத்திருக்கிறது.
மேலும் போலீசார் தற்போது திரிபர்ணா பயக் தாந்த்ரீகச் சடங்கு நடத்தியதா? அல்லது அவரது மனநிலை பாதிப்பால் இந்த செயல் நடந்ததா என்பதைக் கருத்தில் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.