தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களது தோல்விகள் மற்றும் வெற்றிகளுக்கான காரணங்களைத் அலசி ஆராய்ந்து வரும் நிலையில், தற்போது எதிர்க்கட்சியான  திமுகவிற்க்குள் உட்கட்சிப் பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், முக்கியப் பிரமுகருமான ரகுபதிக்கும், முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகத்திற்கும் இடையே ஏற்பட்ட நேரடி மோதல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் திமுகவின் செயற்குழுக் கூட்டம் நேற்று வழக்கமான விவாதங்களுடன் தொடங்கியது. கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சிப் பணிகள் குறித்துப் பேசப்பட்டபோது, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி தொடர்பான விவாதம் சூடுபிடித்தது. கடந்த தேர்தலில் அத்தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் தவெகவின் எழுச்சி குறித்துப் பேச்சு எழுந்தபோது, இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது.

கூட்டத்தில் விவாதம் முற்றிய நிலையில், முன்னாள் அமைச்சர் ரகுபதி கோபத்துடன் எழுந்து, “தவெகவை இந்தத் தொகுதியில் வெற்றி பெற வைத்தது உன்னுடைய மகன்தான்!” என முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகத்தை நோக்கி பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். திடீரென மேடையில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டு வெளிப்பட்டதால் கூட்டத்தில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் உறைந்துபோயினர்.

உதயம் சண்முகமும் இதற்கு விடாப்பிடியாகக் குரல் எழுப்பி பதிலடி கொடுக்க, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது. தேர்தல் களத்தில் கட்சியின் தோல்விக்கு யார் காரணம் என்ற உள்விவகாரங்கள் வெளிப்படையாகவே மேடையில் மோதலாக வெடித்திருப்பது புதுக்கோட்டை மாவட்ட திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.