தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இப்போது அதன் வேகம் 10 கிலோ மீட்டராக குறைந்தது. இன்று மாலை 5.30 மணிக்கு அது பெங்கல் புயலாக உருவாகிறது.

தற்போது நாகைக்கு தென்கிழக்கு 350 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கு 450 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு 530 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது. இந்த நிலையில் கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.