பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில் மனிதம் மறந்து சாதியைக் கௌரவுமாகக் கருதும் மனிதமற்ற மனிதர்கள்! ~ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுக . மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, சாத்தங்குடி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபனும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பிரியதர்ஷிணியும் ஒருவரையொருவர் நட்புடன் பழகி வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றுக்காலையில் அவ்விருவரும் அப்பகுதியில் உள்ள தோப்பு ஒன்றின் கூரைக் கொட்டகையில் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ள கொடூரமான சம்பவம் பேரதிர்ச்சி அளிக்கிறது. இச்சம்பவத்திற்கு முன்னதாக காவல்நிலையத்தில் பெண்ணைக் காணவில்லை என்கிற முன்திட்டமிடலோடு பொய்யான புகார் ஒன்றையும் பெண்ணின் பெற்றோர் அளித்திருக்கின்றனர்.
மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணின் சித்தப்பா ‘உங்களை சென்னை { அ}பெங்களூர் அனுப்பி, வாழ வைக்கிறேன்’ என்று அவ்விருவரையும் நம்ப வைத்து, பெண்ணை மட்டும் ஒருநாள் முழுவதும் வேறோர் இடத்தில் தங்க வைத்துள்ளனர். பின்னர், அப்பெண் மூலமாகவே பார்த்திபனுக்கு போன் செய்து வரவழைத்திருக்கின்றனர். இதற்குப் பின்னரே பெண்ணின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கொட்டகையில் மர்மமான முறையில் அவ்விருவரும் இறந்த நிலையில் தூக்கிடப்பட்டு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றனர் என்றே சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை லட்சுமி காந்தன், சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜி, ஆகியோர்கள் மீது காவல்துறை விசாரணை மேற்கண்டு SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளும் சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்வது சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு வருகிறது என்பதைத்தான் காட்டுகிறது. இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து தொடரும் சாதி ஆணவப்படுகொலைக்குத் தனிச்சட்டத்தை தாமதிக்காமல் இயற்ற முன்வர வேண்டும்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்ட பார்த்திபன் அவரோட தந்தையுடன் சென்று சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தன்னைச் சாதிப் பெயர் சொல்லி பெண்ணின் தந்தை தாக்க முன் வந்ததாகவும், தன்னோட உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கருதி காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அதைக் காவல்துறை வாங்க மறுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இந்தச் சாதிய ஆணவப் படுகொலைக்குப் பின்புலமாக இருந்த கும்பலை கைது செய்வதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல், தொடர்ந்து நிகழும் சாதி ஆணவந் படுகொலைகளை நிரந்தரமாகத் தடுப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எனவே, தவெக தலைமையிலான தமிழக அரசு சாதி ஆணவப் படுகொலைக்கென தனிச்சிறப்பு சட்டத்தை காலதாமதம் இல்லாமல் இயற்றுவதற்குரிய ஆக்கபூர்வமான செயல் திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பார்த்திபன் குடும்பத்திற்குத் தகுந்த பாதுகாப்பை அளிக்கும்படியும் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது என்று பதிவிட்டுள்ளார்.
மனிதம் மறந்து சாதியைக் கௌரவுமாகக் கருதும் மனிதமற்ற மனிதர்கள்! ~ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுக – நீலம் பண்பாட்டு மையம்!
****************************
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, சாத்தங்குடி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபனும் வன்னியர் சமூகத்தைச்…
— pa.ranjith (@beemji) July 1, 2026
