
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் மகப்பேறு விடுமுறை என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்கள் தகுதி காண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க முடியாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது.
அதோடு பணிமூப்பினை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மகப்பேறு விடுமுறை காலம் பெண் ஊழியர்கள் தகுதிக்காண் பருவத்தில் இருந்தாலும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்த நிலையில் தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விதிகளின்படி தகுதிக்காண் பருவ கால பணிக்காலம் 28.4.2025 அன்றைய தினத்திற்குள் முடிவு பெறாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். அதே நேரத்தில் ஏப்ரல் 28 2025 ஆம் ஆண்டுக்குள் முடிவு பெற்றவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அறிவிப்பின்படி மகப்பேறு விடுமுறை தகுதி காண் பருவ கால விடுப்பில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.