
கடலூர் மாவட்டம் சோணங்குப்பம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எங்களது ஊரில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் வருகிற மார்ச் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் திருவிழாவிற்கு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்ட நிலையில் கடலூர் துறைமுகம் காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
எனவே ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும் படி காவல்துறையினருக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார். இதைப்போலவே கடலூர் மாவட்டம் அகரத்தில் கணேசமூர்த்தி என்பவர் அங்குள்ள ஸ்ரீ நல்ல கூந்தல் அழகிய அம்மன் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது இந்த வழக்கு நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் மனுதாரர் தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர் ஏ சதீஷ்குமார் “இதற்கு முன்பாக எந்த பிரச்சனையும் இல்லை, ஆனாலும் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்” என்று கூறினார்.
அதற்கு காவல்துறை தரப்பிலிருந்து குற்றவியல் வழக்கறிஞர் கே எம் டி முகிலன் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றார். இதை தொடர்ந்து நீதிபதி பொதுவாக தமிழகம் முழுவதும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினர் அனுமதிக்க வேண்டும் என்றும் காவல்துறையினரின் பாதுகாப்புக்காக மனுதாரர்கள் தலா ரூ.10ஆயிரத்தை வழங்க வேண்டும்.
அதோடு ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது ஆபாச நடனங்களோ, அல்லது இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களோ இடம்பெறக்கூடாது என்றும், சாதி மதம் அரசியல் தொடர்பான பாடல்கள், பேனர்கள், வசனங்கள், நடனங்கள் இடம்பெறக்கூடாது என்றும், இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். அதே போல அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி ஒருபோதும் நிகழ்ச்சியை நடத்த காவல்துறையினர் அனுமதிக்க கூடாது என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.