திருப்பூர் ரயில் நிலையம் அருகே இன்று ஒரு குழந்தையும் பெண்ணும் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஒரு பெண்ணும் குழந்தையும் உடல் சிதறி கிடந்தது தெரிய வந்த நிலையில் அவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் இறந்தது யார் என்பது தெரிய வந்தது. அதாவது அந்தப் பெண்ணின் பையை சோதனை செய்த போது திருச்சியில் இருந்து கோவை செல்வதற்கான டிக்கெட் இருந்தது தெரியவந்தது. பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற 26 வயது பெண் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இவரது குழந்தை யாகேஸ்வரன் (4) என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில் விஜயலட்சுமி தன்னுடைய கணவன் ஐயப்பனுடன் குடும்பத்தகராறு காரணமாக வீட்டை விட்டு நேற்று காலை வெளியேறியதாக கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்த நிலையில் இன்று காலை தாயும் மகனும் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டது தெரியவந்தது.

குடும்ப பிரச்சனையின் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து மகனுடன் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்தாரா அல்லது தண்டவாளத்தில் ரயில் வரும்போது குதித்து தற்கொலை செய்தாரா போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.