
மதுரை மாவட்டம் உத்தங்கடியில் திமுக கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்த நிலையில் முதலில் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, பெரியார் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது திருவுருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பகல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, என்னைப் பொருத்தவரைக்கும் பணிவு தான் தலைமை பண்பின் அடையாளம். சொல்லை விட செயலே பெரிது. வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று சொல்வது உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான். தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அலையை விட ஆதரவான அலை தான் அதிகம் வீசுகிறது. தடம் மாறாத கொள்கையை கொண்டுள்ளதால் எந்த கோமாளி கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியவில்லை. இனியும் வெல்ல முடியாது என கூறியுள்ளார்.