ஜார்கண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பயணம் செய்த பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் பயங்கரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ஜாம்ஷெட்பூரிலிருந்து ஹசாரிபாக் நோக்கி மூன்று பெண்கள் தங்களது ஓட்டுநர் ரன்பீர் சிங்குடன் செவ்வாய்க்கிழமை காலை காரில் புறப்பட்டுள்ளனர்.

வழியில் புகழ்பெற்ற சூர்யா மந்திரை தரிசித்துவிட்டு மதியம் 12.25 மணியளவில் ராஞ்சி-டாட்டா நெடுஞ்சாலையில் தசம் ஃபால்ஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ எஸ்யூவி (SUV) கார் ஒன்று இவர்களது வாகனத்தின் மீது லேசாக மோதியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய ஸ்கார்பியோ காரில் இருந்த நபர்கள், சமாதானமாகப் பேசுவதற்குப் பதிலாகப் பெண்களிடம் மிக ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுள்ளனர்.

பாதுகாப்பு கருதி பெண்கள் அங்கிருந்து காரை எடுக்கச் சொல்ல, அந்தப் போக்கிரி கும்பல் இவர்களது காரை விடாமல் பல கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றுள்ளது. ஒருகட்டத்தில் சாலையை வழிமறித்து நிறுத்திய அக்கும்பல், காரின் கதவுகளைப் பலவந்தமாகத் திறக்க முயன்றது.

அது முடியாமல் போகவே, சாலையோரம் கிடந்த கற்களை எடுத்து காரின் மீது சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் காரின் பக்கவாட்டுக் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து, ஓட்டுநர் ரன்பீர் சிங் காயமடைந்தார்.

பெண்கள் காருக்குள் பூட்டிக்கொண்டு அலறியபடியே 100 மற்றும் 112 ஆகிய அவசர எண்களுக்குப் போலீசாரைத் தொடர்பு கொண்டனர். ஆனால், போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்தக் நபர்கள்  அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவத்தின் சிசிடிவி மற்றும் செல்போன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வைரலான இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அதிரடி விசாரணையில் இறங்கிய  போலீசார், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ காரைப் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இந்த அராஜகத்தில் ஈடுபட்ட ராஜ்குமார் மஹதோ மற்றும் சோயிப் ரசா ஆகிய இருவரையும் அடையாளம் கண்டு, அவர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இந்த நெடுஞ்சாலையில் முறையான போலீஸ் ரோந்து வாகனங்கள் இல்லாததே இத்தகைய துணிகரச் சம்பவங்களுக்குக் காரணம் எனப் பாதிக்கப்பட்ட பெண்களும், உள்ளூர் மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.