இலங்கையில் நேற்று 9-வது ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது. இறுதியில் அந்த அணி 19.2 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளும், ரேணுகா தாகூர் சிங், பூஜா மற்றும் ஸ்ரேயங்கா படில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் 14.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 45 ரன்களும், ஷபாலி வர்மா 40 ரன்களும் எடுத்தனர். மேலும் இதனால் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.