சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 218 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஜெயக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். நேற்று அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தலைமை ஆசிரியரின் டிபன் பாக்ஸை கழுவுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

இதுகுறித்து விசாரணை நடத்திய பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் கூறும்போது, பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்த புவனேஸ்வரி முட்டை மற்றும் உணவு சமைப்பதில் ஊழல் செய்ததாக அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அருகில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

உணவு பாத்திரத்தை கழுவுவது போலவும் பள்ளி வளாகத்தை நீர் ஊற்றி சுத்தம் செய்வது போலவும் சத்துணவு அமைப்பாளர் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு எடுத்த அந்த வீடியோவை பழிவாங்கும் நோக்கத்தில் இப்போது வெளியிட்டுள்ளார் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.