
செங்குன்றம் அருகே உள்ள பெருங்காவூர் பகுதியில் அமைந்துள்ள சிங்கிலிமேட்டைச் சேர்ந்த நசிமா என்ற பெண், உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
ஶ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நசிமாவுக்கு சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியதாக உறவினர்கள் கூறினர். இந்த நேரத்தில், அங்கு பணியாற்றும் வார்டு பாய் ராஜ்குமார், சிகிச்சைக்காக வந்த நசிமாவிடம் அத்துமீறிய நடந்துகொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
உடனடியாக பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது உறவினர்கள் இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, நசிமாவின் உறவினர்கள் செங்குன்றம் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வார்டு பாய் ராஜ்குமாரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி அடைந்த நசிமா மற்றும் அவரது குடும்பத்தினர், தொடர்ந்து அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பவில்லை என தெரிவித்தனர். மேலும், மருத்துவமனை முன்பாகவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.