
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் செங்கோட்டையன் இருப்பதாக கூறப்படுகிறது. இன்று ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி அமையும் என்றார். அதோடு அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக அசைக்க முடியாத சக்தியாக உருவாகும் என்று கூறிய அவர் திமுக ஆட்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்காக எந்த விதமான நன்மையும் செய்யப்படவில்லை என்றார்.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சென்னையில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை புறக்கணித்தது ஏன் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, ஒருவேளை நினைவு தினமாக இருந்திருந்தால் கண்டிப்பாக நான் சென்னைக்கு சென்று இருப்பேன். ஆனால் பிறந்தநாள் விழா என்பதால் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டி உள்ளது. இந்த நலத்திட்ட உதவிகள் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெறுவார்கள். மேலும் அதனால் தான் சென்னைக்கு செல்லாமல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.