
ஹிமாசலப் பிரதேச மாநிலம் மணாலியில் ஜூன் 8ஆம் தேதி, சுற்றுலா சென்றிருந்த 12 வயது சிறுமி ஒருவர் ஜிப் லைன் (Zip Line) பயணத்தின்போது 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, மொபைல் கேமராவில் பதிவாகி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த திரிஷா பிஜ்வே என்ற சிறுமி, தனது பெற்றோர்களுடன் மணாலிக்கு விடுமுறை பயணமாக வந்திருந்தார். ஜிப் லைனில் சவாரி செய்யும்போது நடு வழியில் கயிறு அறுந்து, தரையில் நேராக விழுந்தார்.
HP : मनाली में जिप लाइन टूटने से नागपुर की त्रिशा 30 फीट गहरी खाई में जा गिरी। वो घायल है और अस्पताल में इलाज चल रहा है। pic.twitter.com/mtO3zTubHk
— Sachin Gupta (@SachinGuptaUP) June 15, 2025
இதனால், அவரது காலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. முதலில் மணாலியின் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்திகர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர், திரிஷாவின் குடும்பத்தினர், சம்பவ இடத்தில் எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லை என்றும், விபத்துக்குப் பிறகு உடனடி உதவியும் கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை எழுப்பினர்.
திரிஷாவின் தந்தை, தனது மகள் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்குவந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த சம்பவம், சுற்றுலா பயணங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.