ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மாலை 6 மணிக்கு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் அந்த பெண் ஏறிவிட்டார். ஆனால் பேருந்தில் வேறு பயணிகள் இல்லை. இதுகுறித்து நடத்துனரிடம் கேட்டபோது வழியில் இன்னும் சில பயணிகள் ஏறுவார்கள் என கூறியுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு பேருந்து வேறு பாதையில் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அங்கிருந்து செல்ல முயன்றார். அதற்குள் ஓட்டுனர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

நடத்துனர் பேருந்து ஜன்னல்களை மூடி விட்டு யாராவது வருகிறார்களா என்று பார்த்துள்ளார். இதனையடுத்து நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அந்த பெண்ணை அவர் ஏறிய இடத்திலேயே இறக்கிவிட்டு நடத்துநரும், ஓட்டுநரும் அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த பேருந்தின் ஓட்டுனர் ரோஷன், நடத்துனர் நான்ஹே ஆகியோரை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.